2025 ஹஜ் யாத்திரையில் பங்கேற்ற 3,500 யாத்திரிகர்கள் – மினா கூடார வசதிகளுக்காக யாத்திரிகர் ஒருவருக்கு 362 சவுதி ரியால் வசூல்
2025 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரையின் போது மினா கூடார வசதிகளுக்காக ஹஜ் சேவை நிறுவனங்களிடமிருந்து கூடுதலாக வசூலிக்கப்பட்ட ரூ.110 மில்லியனுக்கும் அதிகமான தொகை, இதுவரை திருப்பிச் செலுத்தப்படாமல் இருப்பதாக ஹஜ் சேவை நிறுவனங்கள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த தொகை திருப்பிச் செலுத்த வேண்டிய காலம் கடந்தும் ஒரு வருடத்திற்கு மேலாக எந்தத் தீர்வும் வழங்கப்படவில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹஜ் சேவை நிறுவனங்களின் தகவலின்படி, 2025 ஹஜ் யாத்திரையில் 3,500 இலங்கை யாத்திரிகர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு யாத்திரிகரிடமும் மினா கூடாரங்களில் மேம்பட்ட வசதிகள் வழங்கப்படும் என்ற பெயரில், 362 சவுதி ரியால் கூடுதலாக வசூலிக்கப்பட்டது. ஆனால் இந்த வசூல், ஹஜ் சேவை நிறுவனங்களின் எந்தக் கோரிக்கையும் இன்றி மேற்கொள்ளப்பட்டதுடன், வாக்குறுதி அளிக்கப்பட்ட வசதிகளும் நடைமுறையில் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால், குறித்த தொகை முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்பட வேண்டியதாகும் என்றும், சம்பந்தப்பட்ட சவுதி அரேபிய சேவை வழங்குநரும் இந்த குறைபாட்டை ஒப்புக்கொண்டு, வசூலிக்கப்பட்ட தொகை திருப்பிச் செலுத்தப்படும் என உறுதியளித்ததாகவும் ஹஜ் சேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை நாணயத்தில் கணக்கிடுகையில், திருப்பிச் செலுத்த வேண்டிய மொத்தத் தொகை ரூ.110 மில்லியனைத் தாண்டுகிறது.
இவ்வாறான உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதும், ஒரு வருடத்திற்கும் மேலாக அந்த நிதியின் நிலைமை அல்லது இருப்பிடம் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என ஹஜ் சேவை நிறுவனங்கள் கவலை தெரிவிக்கின்றன. சம்பந்தப்பட்ட அரசுத் துறை நியாயமான காலத்திற்குள் பணத்தைத் திருப்பிச் செலுத்த நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகவும், இது சேவை நிறுவனங்களின் நிதியை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருப்பதற்குச் சமமானது என்றும் அவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் லங்காதீப செய்தித்தாள் வினவியபோது, முஸ்லிம் மத மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் மொஹமட் நவாஸ், குறித்த தொகை திருப்பிச் செலுத்தப்பட வேண்டியதாக இருப்பதை உறுதிப்படுத்தினார். எனினும், தற்போதைய நிலையில் குறிப்பிட்ட விபரங்களை வழங்க முடியாது என அவர் தெரிவித்தார்.
மேலும், திணைக்களத்தின் கணக்காளர் மூலம் தகவல்களை பெற்றுக் கொண்டு, இந்த விடயம் தொடர்பில் மேலதிகமாக ஆராய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இதனிடையே, ஹஜ் குழுவின் தலைவர் ரியாஸ் மிஹ்லார் அவர்களை தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகள், செய்தி வெளியிடப்பட்ட நேரம் வரை வெற்றியளிக்கவில்லை.
இந்தத் தீர்வு காணப்படாத நிலை, ஹஜ் சேவை நிறுவனங்களிடையே கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு ஆகியவற்றை உறுதி செய்து, உரிய நிதியை உடனடியாகத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.
No Comments Yet...